கோட்டை வாசலுக்கு எதிரே அகழியை தூர்த்துக் கொண்டு யானைகளை ஏவினால்.., மத்த கஜங்களின் தாக்குதலுக்கு எதிரே கோட்டையின் மரக் கதவுகள் என்ன செய்யும்?
வாதாபி வீரர்கள் அப்படிதான் செய்யப் போகிறார்கள்.நமது கோட்டை வாசல் எதிரில் அகழியை தூர்க்கப் போகிறார்கள். பெரிய பெரிய மரங்களை வெட்டிக் கொண்டு வந்து பாலம் போடப் போகிறார்கள்.
பாலத்தின் வழியே கோட்டைக்கதவுகள் தகர்க்க யானைகளை ஏவப் போகிறார்கள்..அந்த யானைகளுக்கு முதலில் மதுவைக் கொடுத்து விட்டுதான் ஏவப் போகிறார்கள்.அந்த யானைகள் எப்படிப்பட்ட அதிசயத்தை அனுபவிக்கப் போகின்றன.
கோட்டை வாசலின் மேல் மண்டபத்தில் இருந்தும் பக்கத்து மதில் சுவர்களின் மேல் இருந்தும் ''வஜ்ராயுதம்'' விழுவது போல் வேல்கள் வந்து யானைகளின் தலை மீது விழும்.
அந்த மது உண்ட யானைகள் பயங்கரமாய் பிளிறிக்கொண்டு திரும்பி ஓடி வாதாபி வீரர்களை துவைத்து நாசமாக்கப் போகிறது.
மேலே இருந்து விழுகிற வேல்களுக்கு தப்பி சில யானைகள் வந்து கதவில் மோதும். அதனால்,கோட்டைக்கதவு பிளக்கும்
அப்போது அந்த யானைகளுக்கு அதிசயம் காத்திருக்கும்.
வெளிக்கதவு பிளந்ததும்,உள்ளே நீட்டிக் கொண்டிருக்கும் வேல் முனைகள் அவற்றின் மண்டையை பிளக்கும் போது அந்த யானைகள் வந்த வேகத்தை விட திரும்பி ஓடும் வேகம் அபாரமாக இருக்கும்...